இளைஞனே, துணிந்து நில்!
வானத்தை எட்டி நின்று விடாதே, அதையும் தாண்டி நிலவின் முதுகைத் தட்டு, சற்றே இளைப்பாறி, அங்கிருந்து வேறு ஒரு கிரகத்திற்க்குத் தாவு. விரிந்து கொண்டே இருக்கிறது அண்டம், நீ மேலே உயர அது எப்போதும் தடையாக இருக்கப்போவதேயில்லை. நீதான் உன் எல்லைகளை அதனளவு விஸ்தரித்துக் கொள்ள வேண்டும். வெற்றி என்பது ஒரு இடத்தை பிடிப்பதல்ல, பிடித்த இடத்தை தக்கவைத்துக் கொள்வது!
தினம் தினம் ஒவ்வொரு கணத்தையும் வாழ்! நேற்றைய சரித்திரங்களை பாடமாகப் படி, தவறுகளை நினைத்துப் புலம்பாதே. நாளை வரலாற்றை உன் கரங்களால் செதுக்கு, வெறும் ஆசையால் ஆகாசக் கோட்டை கட்டாதே! உழை! உழைப்பிற்கு நிகர் வேறெதுவுமில்லை. உழைத்து கிடைத்த கனியே சுவைக்கும்!
விண்ணிலே நீ தாவும் போது, காற்றும், புவியீர்ப்பும் உன்னை மீண்டும் மண்ணில் தள்ளும். சோர்ந்து போகாதே, முயற்சி செய். ஆயிரம் முயற்சிகளும் தோல்வியானால், ஆயிரம் பிழைகளை செய்தாய் என்று உணர்.முடியாது என்று துவண்டுவிடாதே. முடித்துக் காட்டு!
நீ இளைஞனாய் இருப்பது, உனது வயதால் அல்ல, உனது மனதால், நினைவால்.நாளை என்ன செய்யவேண்டும் என்று இன்று நினை. நினைப்போடு நில்லாமல், நிஜமாக்கிக் காட்டு!
வாழ்க்கை ஒரு பெரும் சூறாவளி, திறமையோடு கலம்பிடித்தால்தான் உன்னால் கரை காணமுடியும். உனக்குளே இருக்கிற திறமைகளை நீ மறுப்பதால்தான் அவை வெளிவராமல் இருக்கின்றன.வெளிக்கொணர ஆவன செய். உனக்குளே உன்னையே தேடு. பாதைகள் மாறும், பயணங்கள் மாறும். தேடுதலை நிறுத்தாதே. தொலைந்து போக பயப்பாடாதே. அப்போதுதான் புது வழி கிடைக்கும்.
நிதமும் பாதவம் இடையே மாதவம் செய்யும் ஆதவம் எழுமுன் உன் துயில்தவம் கலை. உலகத்தையே நீ தட்டி எழுப்பு. பகலிலும், இரவிலும் வெறுங்கனா மட்டும் காணாமல், வைகரைத் துயில் எழுந்து கனவை நனவாக்கு.
மனச்சிக்கல் வந்தால் மழையிலே நனை, தாவரத்தின் பசுமையை ரசி, கவிதை பாடு. பார்வையை விஸ்தரி, உன் பாதைகள் தானாக விரியும். சோம்பலை ஒழி! இசை கேட்டு வசைகளை கரை! தியானம் செய்!உண்மை பேசு! மழழையின் குரல் கேள்! குறள் படி!
மனம் கனக்கின்ற வேளைகளில், கணத்தில் இடுக்கண் களையும் நட்பு நாடு. உனக்குளே இருக்கும் உலகத்தை தேடு. உலகம் உன்னைத் தானாகத் தேடும். ஏறு போல் நட, பிரளையத்தைக் கண்டும் அஞ்சாதே! உடலை முறுக்கேற்றுவதோடு நில்லாமல் மனதையும் முறுக்கேற்று! கண்டதை திங்காதே, ஆனால்கண்டதைப் படி! வெற்றி என்பதும் தோல்வியென்பதும் சுத்த வீரன் பார்வையில் ஒன்றாகிவிடும். முயற்சியே மாட்சி! விடுகின்ற ஒவ்வொரு மூச்சையும் ஒரு முயற்சிக்கு விடும் போதே, அதன் பலன் உன்னைச் சேர்கிறது. இந்த கணமுதல் தொடங்கு! நீயார் என்பதை தேடு! காதலித்துப் பார்; உன்னையும், உன் உணர்வுகளையும், உன் உறவுகளையும்.
உலகத்தோடு உத்துவாழச் சொல்வர், உலகம் என்ன பகற்றுகிறது என்று பகுத்தறிவு கொண்டு ஆய்வு செய். மனம் நிலை படுத்தப்பட்ட நிலையில் இருந்தாலொளிய அதன் சொல் கேளாதே! மனம் இதயத்திலிருக்கிறது என்பது பொய்யுரை என்று என்றாவது நீ சிந்தித்ததுண்டா?உன் சிந்தனைகளின் பலத்தை குறைவாக எடை போடாதே. நீ நினைப்பதையே காண்பாய். பழமொழிகள் கதைகொண்டும், இலைகொண்டும் காய் மறைத்துச் சொல்லும். தோலுறித்து அதன் கனிகளைப் பார், அடுத்த நூற்றாண்டிலும் அவை புதுசிந்தனைகளாகவே இருக்கும்.
தனித்து நிற்கத்தயங்காதே! ஆயிரம் நட்சத்திரம் இருந்தாலும், ஒரு சூரியனே உலகை இயக்கிறது! உன் சிந்தனைகளை சிறகாக்கி, வந்தனைகளைப் பெறு! மலையளவு உயர்ந்தாலும், கடுகளவாய் இரு!
உன் தேடலின் தொடக்கமல்ல இது, அது நீ விந்தாக இருக்கும்போதே தொடங்கியது, முடிவுமல்ல இது. இடைபட்ட காலத்தில் உனக்குள் அடிக்கும் அபாய மணி! உன் வாழ்க்கையோட்டத்தின் ஒய்வு பெறும் சமயம் நீ அடுத்தவரியை படிப்பதோடு முடிகிறது. மீண்டும் ஒய்வெடுக்கும் போது இந்த பதிவின் முதல் வரி உனக்காக காத்திருக்கிறது!

