மனம்போன போக்கிலே போய்க் கொண்டிருக்கிறது வாழ்க்கை. அறியாமலில்லை நான்,
அறிந்தும் அது எங்குதான் போகிறது என்று, தேரோட்டியில்லாத ரதத்திலேயே அமர்ந்து கொண்டு, வேடிக்கைப் பார்ப்பது சற்றே அபாயகரமானதுதான். ஆனால் அதிலும் ஒரு திரில் இருக்கத்தான் செய்கிறது. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? மனிதன் போனபாதையில் மறந்து போகலாமா? கண்ணதாசனும் எதே இடத்திலே அமர்ந்து கொண்டுதான் பாடியிருப்பான் போலும். செல்லும் திக்கை விட்டு, வேறுபாதை ஓடுவதானால் கூட பரவாயில்லை. பாதையே இல்லாத திக்கில் பயணத்திக் கொண்டிருக்கிறேன் நான்!
கடிவாளத்தை பிடித்து, குதிரைகளை அடக்கி, சற்றே சிரமப்பட்டுத்தான் செல்லும் திக்கை நோக்கி நான் பயணக்கிமுடியும். இருந்தும் அதைச் செய்யாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். பயணத்தின் திக்கை மாற்றுவதைக் காட்டிலும், இந்த கணத்தை, இந்த நொடியை பதிவு செய்வதில் கவனமும் ஆர்வமும் அதிகம். மீண்டும் இந்த கட்டுகடங்காத பாதைக்கு வரமாட்டேன் என்ற சுய நம்பிக்கை போலும். அல்லது வந்திவிட்ட இந்த பாதைக்கு ஒரு முழுக்குப் போடுவதற்காவும் இருக்கலாமோ? யார் அறிவார்?
நாம் ஒவ்வொருவருக்கும் இந்த கணங்கள் கண்டிப்பாய் இருக்கும். சிலருக்கு தெரிந்தே(என்னைப் போல) சிலருக்கு சிறுதும் தெரியாமல். ஆனால் அணைவருக்கும் இருக்கும். திரும்பிப் பார்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனும் கேள்வி எழும். தீயதை விட முயற்சிப்பதைக் காட்டிலும், நல்லதை செய்ய முயற்சித்தால் தீயவை(பழக்கங்கள்) விலகும் என்று பாரதி சொல்லியிருக்கிறான்.
என்ன நல்லதைச் செய்து நான் திருந்தப்போகிறேனோ? தவறு செய்வதை பாவமாக நான் கருதுவதில்லை, பாடமாகத்தான் கருதுவதுண்டு. அப்படி இருக்க தவறுகள் செய்யச் செய்ய மனிதன் பல பாடங்களைப் படிக்கிறான்( அவன் திறந்த பார்வையோடும் மனதோடும் இருந்தால்). இந்த அனுபவப் பாடங்களை ஏட்டுக் கல்வியில் பெற்றுவிட முடியாது. புத்தகத்தில் படித்திட முடியாது. வருங்காலத்தில் விஞ்ஞானம் இவ்வாக்கியங்களைப் பொய்யாகலாம். ஆனால் இவ்வனுபவங்கள் வாழ்வதற்கு மிக அவசியமென்பதை விஞ்ஞானத்தால் பொய்ப்பித்துவிடமுடியாது.
இனி என் பயணத்தின் திக்கு, என் லட்சியங்களை நோக்கு ஓடவேண்டியது தான். கடிவாளத்தைப் பிடிக்க கைக்கோலை கீழே வைக்கிறேன். அடிக்கடி அயரும்போதோ, அனுபவங்களை அணுகும் போதோ, பயணத்தின் பகுதிகளை பதித்தும் வைக்கப்பார்க்கிறேன்.